திங்கள், 16 மே, 2022

குறுந்தொகை பாடல் 239 SANGAM TAMIL LITERATURE KURUNTHOGAI

 



குறுந்தொகையில் "ஆசிரியன் பெருங்கண்ணன்" என்ற புலவரின் பாடல் ஒன்று குறிஞ்சித்திணையில் அமைந்துள்ளது....


 மலைநாட்டுத்  தலைவன் ஒருவன் பக்கத்து மலைநாட்டில் உள்ள பெண்ணை காதலிக்கிறான். அவர்களின்  காதல்வாழ்வு (களவொழுக்கம்) பலநாள்கள் தொடர்கிறது. தலைவன் திருமணத்திற்கான முயற்சிகள் எவற்றையும் மேற்கொள்ளவதாக தெரியவில்லை. அவன் அவளோடு களவொழுக்கத்தில் கூடி மகிழ்வதையே விரும்புகிறான். அவர்களின் காதல், ஊரில் அனைவருக்கும் தெரிய வந்துவிட்டது. அதனால், ஊர் மக்கள் அலர் பேசுகிறார்கள். இதனால் தலைவி பெரும் வருந்தமுற்று உடல் மெலிந்து காணப்படுகிறாள். தலைவன் தன்னை விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவள் விரும்புகிறாள். இதை அவனிடம் நேரடியாக சொல்லவும் தயக்கம். ஒருமுறை வழக்கம்போல் அவளைக் காணத் தலைவன் வந்து வேலிக்குப் புறமாக காத்திருக்கிறான். இதை அறிந்த தலைவி,  தன் வருத்தத்தையும் விருப்பத்தையும் தோழியிடம் கூறுவதுபோல் தலைவன் காதுகளில் கேட்குமாறு கூறுகிறாள். 

அதுதான் இந்தப்பாடல்....பாடலில் கூட தலைவி  விருப்பத்தை நேரடியாத கூறாமல் தலைவனின் மலையை பற்றி புகழ்ந்து கூறுவதுபோல மறைமுகமாக கூறி உணர்த்தியுள்ளார்...


************************************************

தொடிநெகிழ்ந் தனவே தோள்சா யினவே

விடுநாண் உண்டோ தோழி விடர்முகைச்

சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள்

நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி

பாம்புமிழ் மணியின் தோன்றும்

முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே. 

                                     -குறுந்தொகை 239

************************************************

தொடி = வளையல்; 

சாயின = மெலிந்தன; 

விடர் = பிளவு; 

முகை = குகை; 

சிலம்பு = மலை; 

அலங்குதல் =அசைதல்; 

குலை = கொத்து; 

குறுஞ்சிறை = சிறிய சிறகு; 

தும்பி = ஒரு வகை வண்டு; 

முந்தூஉழ் = மூங்கில்.


   தோழி! பிளவுகளையும் குகைகளையும் உடைய மலை, அந்த மலை முழுவதும்  காந்தள் பூவின் மணம் வீசுகிறது. அசைகின்ற கொத்துக்களாக உள்ள அந்த காந்தட் பூவின் மகரந்ததை சிறு சிறகுகளை உடைய தும்பி ஊதி எடுக்கிறது. அந்த மலரில் அமர்ந்துள்ள வண்டு பார்பதற்கு பாம்பினால் உமிழப்படும் மாணிக்கத்தைப் போலக் காட்சி அளிக்கிறது. அந்த மலைகளுக்கு  மூங்கில் வேலியாக உள்ளது. அத்தகைய  மலைகளை உடைய தலைவனால், என் கை வளையல்கள் நழுவின; என் தோள்கள் மெலிந்தன; இனி விடுவதற்குரிய நாணம் உள்ளதோ தோழி ? அது முன்னரே ஒழிந்தது.


*****


ஊரில் வெளியே தலைகாட்ட முடியாதபடி  நம் காதலைப் பற்றியே அனைவரும் பேசிக்கொள்கின்றனர். இனி விடுவதற்கு என்னிடம் நாணம் இருக்கிறதா (விடுநாண்) தோழி???? என்று வருந்துகிறாள் தலைவி.

இந்த வருத்தத்தில் கைகளும் தோளும் மெலிந்து விட்டனவே... இனி வீட்டில் உள்ளவர்கள் உடல் மெலிந்ததற்கான  காரணத்தை கேட்பார்களே...என்ன பதில் சொல்வது.


   காந்தள் மலரின் தாது இயற்கையாகவே மணம் கமழும் தன்மை உடையதானாலும், தும்பி ஊதியதால் இன்னும் அதிகமாக மணம் கமழ்வதாயிற்று. பாம்பு காந்தளுக்கும், பாம்பு உமிழும் மணி வண்டுக்கும் உவமைகள். ”காந்தளும் தும்பியும் பொருந்தியது பாம்பும் மணியும் போலும் அச்சம் தரும் தோற்றத்தைத் தந்தது போல, எங்கள் நட்பும் அஞ்சுவதற்கு உரியதாயிற்று” என்று தலைவி கூறுவதாகத் தோன்றுகிறது. காந்தளின் தாதை ஊதி அதன் மணம் எங்கும் பரவும்படி செய்யும் தும்பியைப் போலத் தலைவன் என் நலனை நுகர்ந்து எங்கும் அலர் (பழிச்சொற்கள்)  பரவும்படிச் செய்தான் என்றும் அதனால், தன் மேனி மெலிந்ததையும் நாணம் அழிந்ததையும் கூறித் திருமணத்தின் இன்றியமையாமையைத் தலைவனுக்குத் தலைவி புலப்படுத்துகிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here